சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலையில் சில இளைஞர்கள் 4ஆம் தேதி இரவு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அவ்வழியே பணி முடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ்(54) என்பவருக்கு வழிவிடாமல் சாலையிலேயே மது குடித்து அமர்க்களம் செய்துள்ளனர்.
ஹாரன் அடித்தும் நகராத அவர்கள் பீர் பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்துவிட்டு இருசக்கர வாகனத்தின் சாவி, செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, ரத்தம் கொட்ட கொட்ட உதவி ஆய்வாளர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதனையடுத்து அவரது தலையில் 10 தையல், இடது கண் புருவத்தின் அருகே 3 தையல் போடப்பட்டது.
பின்னர், இது குறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 341, 294(b), 324, 332, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.