தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2022, 7:52 PM IST

ETV Bharat / state

’இங்கே போஸ்டர் ஒட்டுனா அவ்வளோ தான்’ - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி பலகைகளில் போஸ்டர் ஒட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சி
மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் போஸ்டர் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறை புகார் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களின் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,37,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 01ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரூ.1,21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 15 நாட்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டிய 252 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

ABOUT THE AUTHOR

...view details