சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஷீபா வாசு மறைவு - முதலமைச்சர் இரங்கல்! - திமுக கவுன்சிலர் ஷீபா வாசி
சென்னை மாநகராட்சி 122-வது வார்டு, திமுக கவுன்சிலர் ஷீபா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் வென்ற 122ஆவது வார்டு உறுப்பினர் ஷீபா வாசு உயிரிழந்த நிலையில், மாலை 5 மணிக்கு அவரது உடல் தகனம் செய்ய இருக்கிறது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் மண்டலம் 9, 122-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷீபா வாசு. இவர் திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
இவர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசு இன்று (16-02-2023) அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருந்தினேன்.
மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல்வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122ஆவது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாலை ஐந்து மணிக்கு உடல் தகனம் செய்ய இருக்கிறது. ஷீபா வாசுவின் மகன் பிரபு குமார் முதலமைச்சரின் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு இணை இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் பிரசாத் மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.