தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செக்யூரிட்டி நிறுவனத்திடம் மருத்துவர்களை நியமிக்க டெண்டர் வழங்கிய சென்னை மாநகராட்சி - செக்யூரிட்டி நிறுவனமிடம் மருத்துவர்களை நியமிக்க டெண்டர்

Chennai Corporation Tenders: செக்யூரிட்டி நிறுவனத்திடம் மருத்துவர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி டெண்டர் வழங்கியுள்ளது.

செக்யூரிட்டி நிறுவனமிடம் மருத்துவர்களை நியமிக்க டெண்டர்
செக்யூரிட்டி நிறுவனமிடம் மருத்துவர்களை நியமிக்க டெண்டர்

By

Published : Jan 6, 2022, 10:00 PM IST

Chennai Corporation Tenders: சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் மண்டலம் 4, 10, 13இல் ஆயுஷ் மருந்தகம் (ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி) இயங்கிவருகிறது. அதற்குப் பிறகு மண்டலம் 5, 6இல் இந்த ஆயுஷ் மருந்தகம் விரிவாக்கம் அடைந்தது.

இந்த ஆயுஷ் மருந்தகங்களில் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பயனடைந்துவருகின்றனர் என மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஆயுஷ் மருந்தங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் தேவையான மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் (SECURITY AGENCY) மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செக்யூரிட்டி நிறுவனத்திடம் மருத்துவர்களை நியமிக்க டெண்டர்

மருந்து சார் பணியாளர்கள்

மாநகராட்சியில் செயல்பட்டுவரும் ஆயுஷ் மருந்தகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் தேவையான மருத்துவர்கள், மருந்து சார் பணியாளர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த, மின்னணு ஒப்பம் அக்டோபர் 20ஆம் தேதி கோரப்பட்டது.

அதில் ஐந்து ஒப்பங்கள் பெறப்பட்டு நான்கு தொழில்நுட்ப ஒப்பத்தில் தேர்வுசெய்யப்பட்டு நிதி ஒப்பம் நவம்பர் 17ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. இந்த நான்கு ஒப்பந்ததாரர்களில் மோனிஷா தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மீதமுள்ள மூன்று நிறுவனங்களைவிட குறைவாக டெண்டர் மதிப்பு (tender quote) வழங்கி உள்ளது.

அதாவது ஒரு கோடியே 27 லட்சத்து இரண்டாயிரத்து 402 ரூபாய்க்கு டெண்டர் மதிப்பை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. அலுவலக மதிப்பீடாக ஒரு கோடியே 36 லட்சத்து 99 ஆயிரத்து 32-ஐ விட 7.28 விழுக்காடு குறைவாக உள்ளதால் இந்த டெண்டரை மோனிஷா தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

செக்யூரிட்டி நிறுவனமிடம் மருத்துவர்களை நியமிக்க டெண்டர்

செவிலியர் பட்டப்படிப்பு பயிற்சி

இதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை தொற்று நோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பட்டப்படிப்பு பயிற்சி (ANM COURSE) 2017-2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இப்பயிற்சிக்குத் தேவையான முதல்வர், இதரப் பணியாளர்கள், மருத்துவமனை பணிகளுக்குத் தேவையான இதர மருத்துவ சார் பணியாளர்கள் (Para Medical Staff) ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தது.

இந்தப் பணியாளர்களை மேலும் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அதே நிறுவனத்துக்கு மாநகராட்சி டெண்டர் வழங்கி உள்ளது. மொத்தம் 59 ஊழியர்களை ஓராண்டு நிரப்புவதற்கு ஒரு கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 546 ரூபாய்க்கு இந்த டெண்டரை மாநகராட்சி வழங்கி உள்ளது.

ஏற்கனவே இதேபோல் மாநகராட்சி உள்ள பல்வேறு மருத்துவம் சார்ந்த துறைக்கும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை வழங்கி உள்ளது சென்னை மாநகராட்சி.

தனியார் நியமனங்கள்

கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் பணியாளர்களை முகமை முறையில் தேர்வுசெய்யப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும், பணிக்காலம் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் மூலம் நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அந்த நியமனங்கள் செல்லாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

ஒருவர் உயிர் காக்கும் விஷயத்தில் மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் நேரடியாக நேர்காணல் நடத்தி காலியிடங்களை நிரப்பாமல் இது போன்று தனியார் நிறுவனத்திடம் வழங்குவது பலரது வாழ்க்கை, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படும் எனச் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ஆர். சாந்தி தெரிவித்தார்.

உரிமைகள் பாதிக்கப்படும்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "மாநகராட்சி, சுகாதாரத் துறையில் தொடர்ந்து இதுபோன்று தனியார் நிறுவனம் மூலம் காலியிடங்களை நிரப்பிவருகின்றனர். இதை நிறுத்தி தேவையான பதவிக்கு இட ஒதுக்கீடு அடைப்படையில் நிரந்தரமாக ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் விடும்போது பல்வேறு முறைகேடுகளுக்கு இது வழிவகுக்கும். மேலும் ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் அந்தத் தனியார் நிறுவனம் கமிஷன் பெற்று குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே ஊழியர்களுக்கு கிடைக்கும். இது பலரது வாழ்க்கை, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படும். பலமுறை இதுபோன்ற நடந்துள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் செய்யக்கூடியது, அரசாலும் செய்ய முடியும். இதுபோன்று தனியார் நிறுவனம் லாப நோக்கில் மட்டுமே செயல்படுவார்கள். இதனால் அரசுக்கு இழப்பும், அந்தத் தொழிலாளிக்கு பாதிப்பும் ஏற்படும்.

ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தற்காலிகமாகப் பணி அமர்த்தப்பட்டவர்கள் நிரந்தரம் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேலும் மேலும் தனியார் நிறுவனம் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொழிலாளர்களுக்கு எதிரானது.

இதுபோன்று நியமனங்களை நேரடியாகவும் செய்யலாம், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் ஏற்கனவே பதிவுசெய்திருந்த மருத்துவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

வருங்காலங்களில் நேரடியாகப் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:Punjab Protest: 'பஞ்சாப் சம்பவம் மூலம் வெளிப்பட்ட காங்கிரசின் எண்ணம்'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details