சென்னை அண்ணா பல்கலை புதிய ஏசி டெக் வளாகத்தில், கரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் விதமாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் சென்டர் Phase-II மையத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 324 காவல்துறையினர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையினர், அவர்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி, இந்த வளாகத்தில் கோவிட் கேர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இங்கு காவல்துறையினருக்கு மூச்சுப் பயிற்சி அளிக்க வல்லுனர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க, சுகாதாரமான உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 34 காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 39 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல்துறையில் 17 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர்.
ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னை சீரானப்பின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி நடக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.