சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர், கலையரசன். சற்று மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்று இருந்தார். அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகே வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈவிலின் கோப்பைல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்த நிலையில் கலையரசன் வேலை மாற்றம் காரணமாக 2021ல் சென்னைக்குத் திரும்பினார். இருந்த போதிலும் முகநூல், வாட்ஸ்அப் சமூக வலைதள செயலி மூலம் இவர்களது காதல் தொடர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது பற்றி அவர்கள் இரண்டு பேரும் தங்களின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர். அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடியினர், முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதுவும் தமிழர் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஈவிலின் கோப்பைல் விரும்பினார். இதையடுத்து சட்டரீதியாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணப்பதிவு செய்தனர். பின்னர் திருமணம் தமிழ் முறைப்படி கைலாய வாத்தியம் முழங்க, சென்னை அடுத்த ஆவடி திருமுல்லைவாயில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
தமிழ் கலாசாரப்படி மணமகன் பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணமகள் பட்டுசேலை, நகைகள் அணிந்தும் வந்து மணமேடையில் அமர்ந்து இருந்தனர். பிறகு வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.