தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயன்பாட்டுக்கு வந்தது அதிநவீன கார் பார்க்கிங்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த அதிநவீன பல அடுக்கு கார் பார்க்கிங், இன்று அதிகாலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் வடிவமைப்பு மற்றும் கட்டணம் குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

By

Published : Dec 4, 2022, 7:27 PM IST

Updated : Dec 4, 2022, 7:49 PM IST

news car parking  chennai airport  chennai airport news car parking  car parking  chennai  chennai news  chennai latest news  கார் பார்க்கிங்  அதிநவீன கார் பார்க்கிங்  சென்னை விமான நிலையம்  பல அடுக்கு கார் பார்க்கிங்  விமான நிலையத்தில் அதிநவீன கார் பார்க்கிங்
அதிநவீன கார் பார்க்கிங்

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் 2,150 கார்கள் நிறுத்தும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 6 அடுக்குமாடிகள் கொண்ட நவீன வாகன பார்க்கிங், இன்று அதிகாலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. புதிதாக கட்டப்பட்ட பார்க்கிங் செயல்பாடுகள் முழுவதும் தனியார் காண்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வாகன பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்குப் பகுதியில், உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்; மேற்குப் பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்; இந்த வாகன பார்க்கிங்கில் 2,150 கார்களை நிறுத்தலாம்; அதில் 700 கார்கள் உள்நாட்டு முனையத்திற்கான கிழக்குப் பகுதியிலும்; 1,450 கார்கள் சர்வதேச முனையத்திற்கான மேற்குப் பகுதிகளிலும் நிறுத்த வேண்டும்;

அதிநவீன கார் பார்க்கிங்

அதைப்போல் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு முனையும் கிழக்குப்பகுதியில் நிறுத்திக்கொள்ளலாம். இந்த வாகன பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய ஐந்து பாயிண்ட்கள் உள்ளன. மேலும் இங்கு மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாகன பார்க்கிங் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தரை தளத்தில் உள்ள பிரதான நுழைவு வழியாகத் தான் நுழைய வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும் போது, வாகனம் வந்த நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது. உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் பிரிந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தைக் குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். டோக்கன்களைத் தவறவிட்டால், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 150, கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும்.

இந்தப் புதிய பார்க்கிங்கில், ஏற்கெனவே பயணிகளை ஏற்றி, இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிட இலவச நேரம் தொடரும். இந்தப் புதிய பார்க்கிங்கில் விமானநிலைய மற்றும் விமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 100 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த அனுமதி உண்டு. அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானநிலைய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தற்போது ரூ.250 மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதிய பார்க்கிங்கில் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிப்பதா அல்லது புதிய கட்டணம் நிர்ணயிப்பதா என்பது குறித்து புதிய கார் பார்க்கிங் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வர். அதேபோல், சென்னை விமான நிலையத்திற்கு பணியின் நிமித்தமாக வரும் பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் போலீசார் வாகனங்களுக்கு இதுவரையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லை. அதுபற்றியும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

கட்டணம்

சென்னை விமான நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக வரும் வாகனங்களில் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு விமான நிலைய போர்டிகோ வரையில் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலை தொடரும். ஆனால், வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரையில் வருவதற்கு, உள்ளே நுழையும்போதே ரூபாய் 40 டோக்கன் வாங்கி விட்டு வர வேண்டும். அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்றுவிட்டால், அதற்கு மேலான கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தாமதமாக சென்றால், அவர்கள் 30 நிமிடங்கள் பார்க்கிங் கட்டணமான ரூ.75 செலுத்த வேண்டியது வரும் என்று விமான நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

இந்தப் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, பழைய வாகன பார்க்கிங் பகுதி முழுவதுமாக மூடப்படுகிறது. இனிமேல் அங்கு எந்த விதமான வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. அந்தப் பகுதியை முழுவதும் புல் தரைகளாக மாற்றி, பூங்காக்கள் அமைக்கும் திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்தவுள்ளது என்று கூறப்படுகிறது.

கார்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுப் பயணிகள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்திற்குப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம்; அந்த நடை மேம்பாலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?:இதற்கிடையே கார் பார்க்கிங் பகுதிக்கு, கார்கள் செல்வதற்கான சாலைகள் ஒரே சீராக அமைக்கப்படாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கார்கள் செல்வதற்கு நீண்ட நேரம் ஆகின்றன. அதைப்போல் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி வரும் பயணிகள், அவர்களுடைய உடைமைகளை டிராலியில் வைத்து மிகவும் சிரமப்பட்டு சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேலாகத் தள்ளி கொண்டு வந்து, கார் நிறுத்தம் பகுதியில் காரில் ஏறுவதற்கு வர வேண்டியது இருக்கிறது.

பயன்பாட்டுக்கு வந்தது அதிநவீன கார் பார்க்கிங்

பயணிகள் வாகனங்களில் ஏறுவதற்கான பிக்கப் பாயிண்ட், இரண்டாவது தளங்களில் இருப்பதால், அதற்கு தரை தளத்தில் இருந்து லிஃப்டில் தான் செல்ல வேண்டியது இருக்கிறது. இரண்டே இரண்டு லிஃப்ட்டுகள் மட்டுமே உள்ளன. அதில் பயணிகள் லக்கேஜ்களுடன் வரும் போது சிறு அளவிலேயே ஆட்கள் வர முடிகிறது. இதனால் பயணிகள் லிஃப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் பயணிகளுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும், எப்படி போக வேண்டும் என்று முறையான அறிவிப்பு எதுவும் இல்லாததால், பயணிகள் திணறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னயங்களை கார் பார்க்கிங்கோடு இணைக்கும் விதத்தில் நடை மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடை மேம்பாலம் விமானம் ஏறச் செல்லும் பயணிகளுக்கு தான் வசதியாக இருக்கிறது. விமானங்களில் இருந்து இறங்கி வரும் வருகைப் பயணிகளுக்கு வசதியாக இல்லை. அவர்கள் தங்கள் உடைமைகளை ட்ராலிகளில் வைத்து தள்ளிக்கொண்டு, தட்டுத் தடுமாறி, கார் பார்க்கிங் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் ஏற்கெனவே இருந்த கார் பார்க்கிங் கட்டணங்கள் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதனைக் குறைக்க வேண்டும் என பயணிகளும், கார் ஓட்டுநர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டண விவரம்:

ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு ரூபாய் 20. அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 25. தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு அதே 20 ரூபாய் தான். ஆனால், இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 30. அதைப்போல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் ரூபாய் 90.

கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது, ரூபாய் 40 வசூலிக்கப்படுகிறது. இனிமேல் புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 75. ஏற்கெனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 100. இனிமேல், புதிய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூபாய் 150. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூபாய் 500.

வேன், டெம்போக்களுக்கு தற்போதைய பார்க்கிங்கில், 30 நிமிடங்களுக்கு ரூபாய் 40. ஆனால், புதிய பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூபாய் 300. மேலும் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய பார்க்கிங்கில், ரூபாய் 110. புதிய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 300. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 1,000.

கட்டணம்

பஸ், டிரக்குகளுக்கு ஏற்கெனவே உள்ள பார்க்கிங்கில் 30 நிமிடம் வரை நிறுத்தினால் ரூபாய் 50. தற்போதைய புதிய பார்க்கிங்கில் ரூபாய் 600. பழைய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூபாய் 110. புதிய பார்க்கிங்கில் ரூபாய் இரண்டு மணி நேரம் நிறுத்தினால் ரூபாய் 600. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால், ரூபாய் 2,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சத்துணவு மையங்களை குறைக்க அரசு திட்டம்? - ஊழியர்கள், கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

Last Updated : Dec 4, 2022, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details