சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்மலேசியா, கொழும்பு, துபாய் ஆகிய நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. ஐந்தரை கோடி மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்கம் சிக்கியது. வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாகவும் கடத்தல்காரர்களுக்கு விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலர்களுக்குரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் 10 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியா, இலங்கை, துபாய் விமானங்களில் வந்த பயணிகள் சுங்க சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தனர். அவர்களை நிறுத்தி மீண்டும் சோதனை செய்தனர்.
18 பயணிகளிடம் நடத்திய சோதனையில் ரூ. 5 கோடியே 44 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்கக் கட்டிகள் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 18 பயணிகளையும் பிடித்து விமான நிலையத்திற்குள்ளே சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் குருவிகள் என தெரியவந்தது.
பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள் என்றும் தெரியவந்தது. குருவிகளிடம் விசாரணை செய்தபோது சுங்கத்துறையில் உள்ள சில அலுவலர்களின் உதவியுடன் கடத்தல் பொருள்கள் வெளியே கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதை அறிந்த மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, 2 விமான நிலைய சுங்கத்துறை ஆய்வாளர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தென் இந்தியாவில் சுங்க இலாகாவில் வரி விதிப்பாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அலுவலர் தான் கடத்தல் ஆசாமிகளுக்கு மூளையாக செயல்பட்டு சுங்கத்துறை அலுவலர்களின் உதவியை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற அலுவலரின் வீடு உள்ள சென்னை கொளத்தூரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.