சென்னை:சென்னை, விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா காலத்திற்கு முன் எப்படி சென்னை விமான நிலையம் பரபரப்பாக இருந்ததோ அதுபோல் தற்போது சென்னை விமான நிலையம் மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக உள்நாட்டுப் பயணிகளைப் பொறுத்தமட்டில் சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூர், மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும், சர்வதேச பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களில் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.இந்தப் பயணிகளின் பெரும்பாலானவர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணிகளின் நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்து உள்ளது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பயணிகள் மற்றும் கூடுதலாக இயக்கப்பட்ட விமானங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 11 ஆயிரத்து 405 விமானங்களில், 17 லட்சத்து 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்து 751 விமானங்களில், 12 லட்சத்து 97 ஆயிரத்து 49 பேரும், சர்வதேச முனையத்தில் 2,654 விமானங்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 558 பேரும் பயணம் செய்து இருந்தனர்.