ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய நடைமுறையை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் இந்திய பயணி, 96 மணி நேரம் முன்பாக கரோனா சோதனை செய்து, தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றை பயணநேரத்திற்கு 72 மணி நேரம் முன்னதாக இனையதளம் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தெரியப்படுத்தி வெளிநாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், இந்திய விமானநிலையங்களில் மருத்துவ பரிசோதனை முடித்து, அரசின் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. அவா்களுடைய வீடுகளுக்கு நேரடியாக சென்று தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஆனால் சென்னை விமானநிலையத்தில் உள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறையினா், மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவு எங்களுக்கு வரவில்லை. எனவே, அந்த மருத்துவ சான்றிதழ் இருந்தாலும் ஏற்று கொள்ளமாட்டோம் என்று கூறி, ஏற்கனவே உள்ள முறைப்படி அரசு முகாம்களுக்கே பயணிகளை தனிமைப்படுத்த அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை துபாயிலிருந்து 179 இந்தியா்களுடன் ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் சிலா் மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி கரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்து, தங்களை வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறிவுள்ளனர்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் குழுவினா் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினருக்கும், பயணிகளுக்குமிடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதங்கள் நடந்தன. ஆனால் அலுவலர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால், அந்த விமானத்தில் வந்த 179 பயணிகளும் தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.