தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.எஸ். அழகிரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் வழக்கு - கே.எஸ்.அழகிரி மற்றும் குடும்பத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Challenging admission of congress leader KS alagiri collage admission, petition filed before MHC
Challenging admission of congress leader KS alagiri collage admission, petition filed before MHC

By

Published : Feb 22, 2021, 1:52 PM IST

Updated : Feb 22, 2021, 4:13 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இயங்கிவருவது பெருந்தலைவர் காமராஜர் கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 'கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை' சார்பில் இந்தக் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், முறையான விதிகள் பின்பற்றாததால் ஐந்து ஆண்டு காலத்திற்கு அதன் அங்கீகாரத்தை நிறுத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டார். மேலும், அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முறையான விதிகளைப் பின்பற்றாமல் கல்லூரி நடத்தி மாணவர்களிடம் கல்வி கட்டணமாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக அறக்கட்டளைக்கு எதிராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அதில், முறையான விதிகளைப் பின்பற்றாமலும் மாணவர்களை ஏமாற்றியும் பண மோசடி செய்த அறக்கட்டளை உறுப்பினர்கள் கே.எஸ். அழகிரி, அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளார்.

மேலும், ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி, மணவர்களிடம் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 50 விழுக்காடு தொகையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், இந்தக் கல்லூரியில் படித்ததால் தன்னுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் தர அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Feb 22, 2021, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details