சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சி. கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் (Madras High court) பொதுநல மனு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக நிரந்தரக் குழு ஒன்றை அமைக்க வேண்டும், விமான நிலையங்கள், விமானங்களில் அறிவிப்புகளை தமிழிலும் மேற்கொள்ள வேண்டும், வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நிரந்தரக் குழுவை அமைக்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சென்னையை மையமாகக் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்புகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைச் செயலர்களுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.