தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2021, 2:26 PM IST

ETV Bharat / state

மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய தடை விதிக்க கோரி வழக்கு - உயர் நீதிமன்றம் மறுப்பு

12ஆம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 31ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ”ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தினால், கூடுதல் மதிப்பெண் பெற தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுவர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாதிக்கப்படும் மாணவர்கள் நீதிமன்றத்தை அணுக எந்த தடையும் இல்லை எனவும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?

ABOUT THE AUTHOR

...view details