வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல பிகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கில் கருத்துக்களை பதிவிட்டோர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலியான தகவல்களை பரப்பி வருவதாக கூறி அந்த ட்விட்டர் கணக்கை முடக்கவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், வதந்தி பரப்புதல் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவது போல வெளியான வீடியோ ஒன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து காணப்படுகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் வடமாநில தொழிலாளர் ஹோலி பண்டிகை கொண்டாவே செல்வதாகவும், தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.