சென்னையின் அம்மா மாளிகையில் திருமண மண்டபம், ஹோட்டல் உரிமையாளர்களுடன் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று (ஜன.5) ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், "திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணம் குறித்த விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 100 நபர்களுக்கு மிகாமல் திருமணம் நடத்த வேண்டும். அதே போன்று உணவகங்களில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ள கரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கடந்த 3 நாள்களில் முகக்கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.நகரில் உள்ள கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூட தடை விதித்துள்ளதை பின்பற்றுகிறார்களா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.