சென்னை: புழல் விநாயகபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் இருசக்கர வாகனத்தைப் போதையில் ஓட்டி சென்ற போது கீழே தவறி விழுந்துள்ளார். இதையடுத்து காயங்களுடன் அந்த பெண் சென்னை பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த போது தன்னால் வரிசையில் நிற்க முடியாது என மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெண் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்களின் தலைமுடியைப் பிடித்துத் தாக்கி, போதையிலிருந்த பெண் சண்டை போட்டுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
இதையடுத்து பெண் போலீசார் ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் அவர்களும் அங்குச் சென்று அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்ட போது, அந்த பெண் மறுப்பு தெரிவித்து மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.