தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா உருவ பொம்மையை வைத்து பரப்புரை செய்த மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கு ரத்து! - ஜெயலலிதா உருவ பொம்மை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை வைத்து ஆர்.கே.நகர் தேர்தலில் பரப்புரை செய்ததாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 3, 2023, 9:57 PM IST

சென்னை: 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக - புரட்சித் தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் போன்ற பொம்மையில் தேசியக்கொடி போர்த்தியபடி வைத்து பரப்புரை செய்தனர்.

இதுதொடர்பாக மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அவசரகதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மட்டுமே ஊர்வலம் நடத்தப்பட்டது, எந்த வகையிலும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசியக் கொடியை அவமதித்ததாக கருத முடியாது எனவும், விதிகளை முறையாகப் பின்பற்றாமல் காவல் துறையினர் நேரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, மூவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'என்எல்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது' - நீதிமன்றம் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details