இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் கடந்த 1985ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், போதைப் பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, மெத்தாம்பேட்டமைன் போன்ற போதை பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கால் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதா?
அதில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா ஊரடங்கின்போது மதுக்கடைகள் மூடப்பட்டதால் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் எண்ணிக்கை பெருமளவு பெருகியது. போதைப்பொருள் அதிகரிப்பால் நாட்டில் நடக்கக்கூடிய கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களும் ஒரு புறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் சிறுவர்கள். அதில், அனைவருமே கஞ்சா, மதுபோதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், போதைக்காக கொள்ளையடிப்பதும் போன்ற அதிர்ச்சித்தகவல் வெளியானது. கடந்த வருடம் சென்னையில் நடந்த 147 கொலை வழக்குகளில் 60 விழுக்காடுக்கு அதிகமான கொலைகள் போதையில் நடந்திருப்பதாகவும், போதைக்காக நடந்த ஆதாய கொலைகள் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையா?
அதுமட்டுமில்லாமல் 246 செயின் பறிப்புச் சம்பவங்களில் 150 சம்பவங்கள் போதைப் பொருள்கள் வாங்க பணமில்லாத காரணத்தினால் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திரா, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து லாரி, பேருந்து மூலமாக கஞ்சா கடத்திவந்து சென்னை, தேனி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.