தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2022, 12:19 PM IST

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய இ-மெயில் முகவரிக்கு நேற்று(நவ.17) மாலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது. குறிப்பிட்ட ஒரு மர்மநபர் விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.

அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மர்ம நபர் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என்று மெயிலில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எத்தனை மணி? உள்நாட்டு விமானநிலையமா, சர்வதேச விமானநிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. அதோடு போலியாக ஐடி உருவாக்கி, அதிலிருந்து இந்த மெயில் வந்துள்ளது தெரியவந்தது.

இதனால் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசார், தமிழ்நாடு உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினர்.

அதோடு டெல்லியில் உள்ள டைரக்டா் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன், BCAS,வெடிகுணடு நிபுணா்களுக்கும் அவசர தகவல் அளித்தனர். பின்னர் சென்னை விமானநிலையத்தில் உயா்அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விமான நிலையத்திற்கு வந்த மெயிலில், சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.

பொதுவாக விமானத்தில் குண்டு வெடிக்கும் என மட்டும் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஆய்வு செய்ததில், வெளிநாடு செல்லும் பயணி ஒருவரை தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரியவந்தது. ஆனாலும் சென்னை விமான நிலையம், விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், கார் பாா்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழில்பாதுகாப்பு படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக, மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலயத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே சென்னை விமானநிலைய போலீசார், இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபா் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜூனியர் மாணவரை தாக்கிய சீனியர் மாணவர்கள் - எச்சரித்த காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details