சென்னை: தமிழ்நாடு பிற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி, பாரபட்சமின்றி உதவித்தொகை வழங்கக்கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தது.
அந்த மனுவில், 'பிற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருவதாகவும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை சமூக நலத்துறை செயல்படுத்துவதால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதால், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும்’ எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பொது வேலைவாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்தது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால், சமூக நலத்துறை மூலம் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற மாவட்டம்தோறும் வருவாய் கோட்டாட்சியர்களை அலுவலர்களாக நியமித்து, அவர்களுக்கான தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.