தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் ஆகச்சிறந்த இசைமேதை இளையராஜாவை அவமதிப்பதா? - ஜெ.பி.நட்டா கண்டனம்

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கூறியுள்ள கருத்து விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமதிப்பதா? எனக் கேட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 18, 2022, 2:21 PM IST

ஜெ.பி.நட்டா அறிக்கை
ஜெ.பி.நட்டா அறிக்கை

புளூகிராஃப்ட் பதிப்பகம் 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் அண்மையில் நூல் வெளியிட்டது. அந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதை ஒருவர் பேசவில்லை என்பதற்காக அவமதிப்பதா? இதுதான் ஜனநாயகமா? ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம், அதற்காக ஏன் அவரை இழிவுப்படுத்தவேண்டும்? " எனக் கேட்டுள்ளார்.

ஜெ.பி.நட்டா அறிக்கை

இளையராஜா கூறியுள்ள கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளது இவ்விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் பதில்

முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், தலித் மற்றும் தலித் விரோதப் போக்கை திமுக காட்டுகிறது.

இது அரசியலமைப்பிற்கு எதிரானது. மேலும் இளையராஜா கூறியுள்ள கருத்தை திமுக மற்றும் இடதுசாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" எனக் கூறியுள்ளார்.

குஷ்பு பேட்டி

நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் "கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு மீதான இளையராஜா கருத்து இயல்பானது, தமிழகத்தில் மத்திய அரசு மீதான வெறுப்புணர்வை திட்டமிட்டு பரப்புவது சரியல்ல", என்று கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், "ஆர்எஸ்எஸ்காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். இளையராஜா பாவம்" எனக் கூறியுள்ளார். மேலும் இளையராஜா போன்ற நபர்களைக் குறி வைப்பதே பாஜகவின் நோக்கம் எனவும் கூறினார்.

இது குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது, "இது இளையராஜாவின் சொந்த கருத்து. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். அவருடைய தனிப்பட்ட கருத்தை அவர் எழுதியுள்ளார். இதை சர்ச்சைக்குள்ளாக்குவது சரியல்ல" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்..!"- இளையராஜா கூறிய காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details