தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரை பிச்சைக்காரர் என விமர்சித்த தயாநிதிமாறன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பாஜக தலைவர் முருகன் கண்டனம்! - அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்த தயாநிதி மாறன்

சென்னை : நிவாரண பணிகளுக்காக மக்களை நிதியளிக்க வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்த தயாநிதிமாறன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

BJP leader Murugan condemned Dayanidhi Maran
பிரதமரை பிச்சைக்காரர் என விமர்சித்த தயாநிதிமாறன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பாஜக தலைவர் முருகன் கண்டன!

By

Published : Apr 23, 2020, 12:50 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரிரு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த திமுக எம்பி தயாநிதி மாறன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் பிச்சைக்காரர்கள் என விமர்சித்திருக்கிறார். தன்னை ஒரு நாகரீக மனிதராகவும் அறிவார்ந்த நபராகவும் காட்டிக் கொள்ள முயற்சி செய்யும் தயாநிதிமாறனின் மறுப்பக்கம் இதன் மூலமாக வெளிவந்ததிருப்பதாக நான் கருதுகிறேன்.

உலகப்போருக்கு சமமான கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் வீரர்களாக இணைந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்தப் போரில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு பதிலாக, நடைபெறும் நிவாரணப் பணிகளுக்கு எதிராக, செயல்பட்டிருக்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டி, நிவாரணப் பணி மேம்பாட்டுக்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவர் கூறியிருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட்டு விட்டு, வெற்று அரசியல் பேசி, தனது அறியாமையையும் அரசியல் வெறித்தனத்தையும் கருத்தாக வெளியிட்டுள்ளார். ஓரிரு நாட்கள் கடந்த நிலையில் தனது தவறை உணர்ந்து கொண்டு அவர் வருத்தம் தெரிவிப்பார் என நினைத்திருந்தேன், அது நடக்கவில்லை. இனியும் அமைதி காக்க முடியாது.

பேரிடர் காலங்களில் மாநில அரசும், மத்திய அரசும் நிவாரண நிதி சேகரிப்பது வழக்கமான ஒன்றுதான். இதற்காகவே தான் பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி ஆகியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. தயாநிதி மாறன் இதை அறியாதவராக இருக்க முடியாது. மாநிலத்தில் திமுக ஆட்சி செய்த போது, அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியே பலமுறை, மக்களிடம் நிவாரணம் கோரிய உதாரணங்கள் பற்பல உண்டு, பிச்சைக்காரர் ஒழிப்பிற்குக் கூட கருணாநிதி நிதி சேகரித்தார் என்பதை தயாநிதி மறுக்க முடியுமா?

தனக்கென வாழாமல் சமுதாயத்திற்காக வாழும் ரிஷிகளும் முனிகளும் பிச்சை எடுத்தது போல தனக்கென வாழாமல் சமுதாயத்துக்கென வாழும் பிரதமர் மோடிக்கு சமுதாயத்திடம் நிவாரணம் கோர 100 சதவிகிதம் தகுதி இருக்கிறது.

பாஜக தலைவர் எல்.முருகனின் கண்டன அறிக்கை

பிரதமரைப் பார்த்து பிச்சைக்காரன் என மன வக்கிரத்தோடு விமர்சித்த தயாநிதி மாறன் தனது தவறை உணர்ந்து, அவர் பயன்படுத்திய அநாகரிகமான வார்த்தைகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் . திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக இதில் தலையிட்டு அவரை சரியான முறையில் வழி நடத்த வேண்டும். இனி வரும் நாட்களில் தனது கட்சி தலைவர்கள் இது, போன்று பொறுப்பற்ற முறையில் பேசுவதை தடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :‘மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வது பற்றி பொய்யான தகவல்’ - அந்தோணிசாமி கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details