சென்னை: மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லெனின் பிரசாத், “மணிப்பூரில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் சீண்டுதல் செய்த காணொளி நாட்டையே உலுக்கியுள்ளது.
பாஜக தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் இட வேண்டும். மணிப்பூரில் முதலமைச்சர் இந்த கலவரத்தை தடுக்க தவறியதற்கு அவரை குடியரசு தலைவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.