சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் தாம்பரம் தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்த சி.டி ரவியை வரவேற்க பாஜகவின் வேதாசுப்ரமணியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாஜகவினர் வந்தனர். இந்த பேரணியானது பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையை ஆக்கிரமித்து பெருங்களத்தூர் ரயில்வே கேட்டை கடந்து காமராஜர் நெடுஞ்சாலை, கலைஞர் நெடுஞ்சாலை வழியாக சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் முடிவடைந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.
அதேபோல் மனித நேய மக்கள் கட்சியின் 13ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் கடப்பேரியில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதற்கு வருகை புரிந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவை வரவேற்கும் விதமாக ஜி.எஸ்.டி சாலையில் பேனர் வைத்து 50க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வலம் வந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியினரும், மனித நேய மக்கள் கட்சியினரும், மாறி மாறி சட்டவிரோதமாக பேனர் வைப்பதும் அனுமதியின்றி வாகன பேரணி நடத்துவது என அத்துமீறி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேனர் கலாசாரத்தால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தும் அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதும், காவல்துறையினர் அதனை கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாகி வருகிறது. நீதிமன்ற உத்தரவையெல்லாம் அலுவலர்கள் காற்றில் பறக்கவிட்டு செயல்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.