ஊரடங்கு காரணமாக கடன் தவணை, வட்டியைச் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த கடன் நிறுவனங்கள், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாக சிறு கடன் நிறுவனங்கள் கடனை வசூலித்துவருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அளிக்கும் புகார்களைப் பெற மாவட்ட வாரியாக தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
கடன் தொகை, வட்டியைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.