சென்னை: கிண்டி அருகேவுள்ள மடுவண்கரை பகுதியில் தங்கள் நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக தனியார் தொலைத்தொடர்பு அமைப்பு செயல்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்பு அதிகாரிகளிடம் ஏர்டெல் நிறுவனம் புகார் அளித்தது. ஜூலை மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் குழுவினருடன் அதிரடி சோதனை செய்தனர்.
அதில், அங்கு சிம் பாக்ஸ்கள் அமைத்து, வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த சிம் பாக்ஸ்கள், சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர், சிம் கார்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது நசீர், ரமீஸ் பைசான், அப்துல் மாலிக், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் சிலருக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ரமீஸ் பைசான் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி RMT டீக்காராமன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியதால், அவற்றை முறையாக கண்காணிக்க இயலாது என்பதால், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.