தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2022, 8:07 AM IST

ETV Bharat / state

'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க'...அட்டவணை போட்டு லேப்டாப் திருடிய பட்டதாரி - சுவாரஸ்யமான பின்னணி!

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை, காலண்டரில் அட்டவணை போட்டு வைத்து நாள்தோறும் இரண்டு லேப்டாப்புகள் வீதம் டார்கெட் செய்து திருடி வந்த திருவாரூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அட்டவணை போட்டு லேப்டாப் திருடிய பட்டதாரி கைது
அட்டவணை போட்டு லேப்டாப் திருடிய பட்டதாரி கைது

சென்னை:சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வரும் ருத்ரேஷ் என்ற மாணவர் உள்பட 2 பேரின் லேப்டாப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது. இதுகுறித்து, ருத்ரேஷ் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லேப்டாப்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் யமுனா தலைமையில் தனிப்படை அமைத்து லேப்டாப் திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஏப். 9) தனிப்படை காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(25) எனத் தெரியவந்தது. மேலும் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் உருவமும், பிடிபட்ட நபரின் உருவமும் ஒன்றுபோல் இருந்ததால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அட்டவணை போட்டு லேப்டாப் திருடிய பட்டதாரி கைது

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்ற இளைஞர்:விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இவருக்கு தாய் தந்தை இல்லை என்பதும், இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பு படித்ததும் தெரியவந்தது. மேலும், இவர் தொலைத்தூர கல்வி மூலமாக பி.எல் படித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையில், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில், மாணவரின் லேப்டாப்பை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் மீது சந்தேகம் இருந்த நிலையில், தனிப்படை காவலர்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

காதல் தோல்வியால் லேப்டாப் திருட்டு:பிடிபட்ட தமிழ்செல்வன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளனர். அந்த காதல் தோல்வியில் முடிவடைந்ததால், ஆத்திரத்தில் இருந்த தமிழ்ச்செல்வன் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை, காலண்டரில் அட்டவணை போட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் நாள்தோறும் சென்று இரண்டு லேப்டாப்புகள் வீதம் டார்கெட் செய்து லேப்டாப்களை திருடியுள்ளார். பின்னர், அதன் வெளித்தோற்றத்தை மாற்றி ஓஎல்எக்ஸ் போன்ற பழைய பொருள்கள் விற்பனை செய்யும் வலைதளத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக, அவரை கைது செய்த காவல் துறையினர் செம்மஞ்சேரி பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு அவர் ஏற்கனவே திருடி வைத்திருந்த 31 லேப்டாப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த காலண்டரில் நாள்தோறும் ஒரு கல்லூரி என கல்லூரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த லேப்டாப்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Audio Leak: அலைபேசியில் ஆசிரியர் ஆபாசப் பேச்சு!

For All Latest Updates

TAGGED:

chennai news

ABOUT THE AUTHOR

...view details