தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூரப்பா மீதான அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்பு: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

By

Published : May 27, 2021, 4:56 PM IST

Updated : May 27, 2021, 5:48 PM IST

சூரப்பா மீதான அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்பு: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்
சூரப்பா மீதான அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்பு: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

16:51 May 27

சென்னை: அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை அளிப்பதற்கு, கரோனா ஊரடங்கு தளர்விற்குப்பின் 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என அரசிற்கு விசாரணை அலுவலரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது அவர் மீது முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய, தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நவம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.  

அதனைத் தொடர்ந்து துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அலுவலர் கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரணையை நடத்தினர். புகார் அளித்தவர்கள், பல்கலைக் கழக அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகின.  

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் அவர் கர்நாடகா செல்லாமல் சென்னையிலேயே தங்கி இருக்கிறார். இந்த நிலையில் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக நோட்டீஸ் மே மாதம் 3ஆம் தேதி அவருக்கு விசாரணை அலுவலரால் அனுப்பப்பட்டுள்ளது.  

அந்த நோட்டீஸில், 'உங்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது?' எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த உரிய விளக்கத்தை விசாரணை ஆணையத்துக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டது.  

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தனது வழக்கறிஞர் மூலம் 11ஆம் தேதிக்குள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது, அதில் கூறப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும், தன் மீதான ஊழல், முறைகேடு புகார்களை முற்றிலும் மறுப்பதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவிடம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ளார்.  

மேலும் தன்னை விசாரணை செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதையும் அதில் கூறியுள்ளார். 

இது குறித்து விசாரணை அலுவலரும், உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கலையரசன் கூறும்போது, 'அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு அனுப்பினோம். அவர் அதனை மறுத்துள்ளார். விசாரணைக் குழுவின் காலம் மே மாதம் இறுதியுடன் முடிவடைகிறது. கரோனா பொது ஊரடங்கால் தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகளை செய்ய முடியவில்லை. எனவே, பொதுஊரடங்கு முடிவடைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 10 நாட்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்' எனத் தெரிவித்தார். 
இதையும் படிங்க:  வாட்ஸ்அப் வழக்கு: பயனர்களின் உரிமையைப் பறிக்கின்றனவா புதிய விதிமுறைகள்?

Last Updated : May 27, 2021, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details