தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் உயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்' - அற்புதம்மாள் உருக்கம்

சென்னை: ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ளதாக குறிப்பிட்டு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

By

Published : Sep 9, 2019, 9:56 AM IST

Updated : Sep 9, 2019, 10:43 AM IST

#29YearsTooMuchGovernor

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பிரிவு 161இன் கீழ் தமிழ்நாடு அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது.

பேரறிவாளன் அன்றும் இன்றும்

இதையடுத்து தமிழ்நாடு அரசு சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியிருந்தது. தற்போது ஓராண்டு நிறைவுபெற்றிருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழு பேர் விடுதலையை சாத்தியப்படுத்தி தங்களது துன்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகிறார்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலி

இந்த நிலையில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், அமைச்சரவை பரிந்துரைத்து ஓர் ஆண்டு நிரபராதி, விடுதலை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதம் ஏனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீர்களே, 29 ஆண்டு அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Sep 9, 2019, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details