தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2023, 10:39 PM IST

ETV Bharat / state

அரிக்கொம்பன் யானை விதிகள் படி பிடிக்கப்பட்டதா? வனவிலங்கு ஆர்வலர்கள் சந்தேகம்

கேரளாவில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் யானை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது அரிக்கொம்பன் யானை விதிமுறைகளைப் பின்பற்றி தான் பிடிக்கப்பட்டதா என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அரிக்கொம்பன் யானை விதிகள் படி பிடிக்கப்பட்டதா
அரிக்கொம்பன் யானை விதிகள் படி பிடிக்கப்பட்டதா

சென்னை: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்னமனுர் அருகே சுற்றித்திரிந்த ‘அரிக்கொம்பன்' முரட்டு யானையை தமிழக வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி இன்று பிடித்தனர். மேலும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பிடிபட்ட யானை மீண்டும் தமிழ்நாட்டிற்குள் வாராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளித்ததால் வழக்கு முடிந்து யானையை களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது. எனினும் வனவிலங்கு ஆர்வலர்கள் அரிக்கொம்பன் யானை விதிகள் படி பிடிக்கப்பட்டதா என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு கம்பம் நகருக்குள் நுழைந்த யானை இன்று அதிகாலை உசிலம்பட்டி அருகே வாழைப்பண்ணைக்கு வந்தபோது 'அரிக்கொம்பன்' பிடிபட்டது. கடந்த சில நாட்களாக, மூன்று 'கும்கி' யானைகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 75 பேர் கொண்ட வனக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். கூடுதலாக, யானைகளைக் கண்காணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஐந்து பேர் கொண்ட பழங்குடியினர் குழு கடந்த ஒரு வாரமாக யானையை கண்காணித்து வந்தனர்.

மூன்று 'கும்கி' யானைகளின் உதவியுடன் 'அரிக்கொம்பன்' தேடுதல் வேட்டையின் போது இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் களக்காடு-முண்டந்துறை பகுதியில் உள்ள மாஞ்சோலை பகுதியில் அரிக்கொம்பனை விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முன்னெச்சரிக்கையாக மணிமுத்தாறு சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் யானை கொண்டு செல்ல போவதாக கூறப்படும் மணிமுத்தாறு சாலையில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. காட்டுப்பகுதிக்குள் யானையை கொண்டு செல்லும்போது வழிப்பதையை சீரமைப்பதற்காகவும் மயங்கிய நிலையில் உள்ள யானையை வாகனத்தில் இருந்து கீழே இறக்குவதற்கும் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து ஊட்டி அரசு கலைக்கல்லுரியின் பேராசிரியர் மற்றும் வன ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், “பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை அடர்ந்த காட்டிற்குள் விட வேண்டும். அப்போதுதான் இந்த யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து காட்டிற்குள் வாழும். ஏனெனில் யானைகள் எங்கு செல்லும் என்று கணிப்பது கடினம். இதற்கான உதாரணங்கள் நிறைய உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள ஹுன்சூரிலிருந்து ஐந்து யானைகளை 200 கிமீ தூரத்தில் உள்ள பந்திப்பூர் காடுகளில் விட்டனர். எனினும் அந்த யானைகள் அங்கே தாங்காமல் ஹுன்சூருக்கே திரும்பியது" என தெரிவித்த ராமகிருஷ்ணன் பிடிபட்ட அரிக்கொம்பனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்குகள் நல பிரதிநிதி, பி. பால்ராஜ் கூறுகையில், “இது போன்ற விலங்குகளை பிடிக்கும் போது இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தினரை அணுகி அவர்களின் முன்னிலையில் செய்ய வேண்டும். மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை இரவு நேரங்களில் விலங்குகளை பிடிக்க குறிப்பாக மயக்க ஊசி செலுத்த அனுமதி இல்லை", என்ற அவர் இந்த அரிக்கொம்பன் யானையின் உடலில் காயம் இருந்ததால் அதனை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் விலங்குகள் வதை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரியது என்றார்.

முன்னாள் கூடுதல் இயக்குனர் மற்றும் வன உயிரின மருத்துவர் (ஓய்வு) மனோகரன் கூறுகையில், “எந்த ஒரு விலங்குக்கும் பெரிய காயங்கள் ஏற்பாட்டாலும் மட்டுமே அதனை இடம் மாற்ற கூடாது. உணவை தேடி அலையும் போது சில காயங்கள் இயல்பாகவே வரும். அவற்றை வன உயிரின மருத்துவர்கள் சரி செய்து விடுவார்கள்" என தெரிவித்த அவர் அரிக்கொம்பன் யானையை பொறுத்தவரை பெரிய காயங்கள் இல்லை. எனவே அதனை வேறு இடத்திற்கு மாற்றலாம். அப்படி மாற்றும் போதும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசிய போது, “அரிக்கொம்பன் யானை சிகிச்சைக்கு பிறகு மக்கள் அச்சபடாமல் இருக்கும் விதமாக அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானையை வனத்துறை, காவல் துறை, வருவாய் துறையினர் இணைந்து தற்போது பிடித்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏப்ரல் 29-ம் தேதி இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் இருந்து கேரள வனத்துறையினரால் அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு (பி.டி.ஆர்.) இடமாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலில் சிகிச்சை அப்புறம் தான் ரிலீஸ்; அரிக்கொம்பன் குறித்து அமைச்சர் அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details