புதுச்சேரி: இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் செயல்பாடுகள் குறித்து முரசொலி சிலந்தி கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. சிலருக்கு மைக் மேனியா இருக்கிறது, தெலங்கானாவில் ஜம்பம் பலிக்காததால் தமிழ்நாட்டைப் பற்றி தமிழிசை கருத்துக்கூறி வருகிறார்.
இந்நிலையில் இதற்கு தமிழிசை பதிலளித்துள்ளார். அதில், 'திமுக தங்களை எரிமலைகள் என சொல்லிக்கொள்கிறது. எரிமலைகளால் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.
மேலும், சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டைப்பூச்சிகளே உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவே தான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக்கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி, அடிக்கடி ஆளுநரைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.
சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்குத்தான் கேமரா மேனியா, மைக் மேனியா உள்ளது. உண்மையை உரக்கச்சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை; கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதை விட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம்). எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது. தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாகத்தெரிந்து கொண்டுபேசுங்கள் என்றார்.
தெலுங்கை பூர்வீகமாகக்கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி, தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச்செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை உங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
நீங்கள் யார் என்னை தமிழ்நாட்டில் கருத்துக்கூற முடியாது என்று சொல்வது. யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகள் தெலங்கானா உள்ளூர் பத்திரிகைச்செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப்போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும்.