இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், "தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அருண் மிஸ்ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நாளினை அந்த ஆணையத்திற்கு சவக்குழி வெட்டப்பட்ட நாளாகக் கருதுகிறேன்.
மோடி அரசுக்கு ஆதரவாகவுள்ளவர்
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளில் அரசு சார்பாகத் தீர்ப்பளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர் அருண் மிஸ்ரா.
வன உரிமைச் சட்டத்தை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின்போது வனப்பகுதியில் வாழும் ஏழை மக்களை வெளியேற்ற இவர் அளித்த உத்தரவு கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.
அமித் ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா சந்தேக மரணம் குறித்த வழக்கை இவரது தலைமையிலான அமர்வு விசாரிக்க அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நியமித்ததைக் கண்டித்து கடந்த ஜனவரி 2019இல் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரர், மதன் லோகூர், ஜோசப் குரியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எப்போதுமே மோடி அரசுக்கு ஆதரவாக அல்லது அதன் முக்கியத் தலைவர்களுக்கு ஆதரவாகவே அருண் மிஸ்ரா தீர்ப்பளித்துள்ளார். சஹாரா பிர்லா ஊழல் வழக்கு, சஞ்சீவ் பட் வழக்கு, ஹரன் பாண்டே வழக்கு, சிபிஐ உள் விவகார வழக்கு முதலியவை இந்த வழக்குகளில் அடங்கும்.
பாரிஸ் கோட்பாடுகளுக்கு முரணான நியமனம்
தேசிய மனித உரிமைகள் ஆணையங்களின் செயற்பாடுகள் குறித்து வகுத்துள்ள பாரிஸ் கோட்பாடுகளுக்கு முரணாக அருண் மிஸ்ராவின் நியமனம் அமைந்துள்ளது. இதுவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுப் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளே நியமனம்செய்யப்பட்டுள்ளார்கள்.