தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2021, 8:33 AM IST

ETV Bharat / state

சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானவர் உயிரிழப்பு!

சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கிரெடிட் கார்டு வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் விசாரணைக்காக ஆஜரானவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம்

சென்னை:ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்துவரும் பிரகாஷ் என்பவர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "டெல்லி பாட்டிலிங் சேவைகள் (DL Bottling Services) நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகுமார், சண்முகம், ஐசிஐசிஐ வங்கியின் விற்பனை நிர்வாகிகள் ஹரி, மாதவன்ராம் ஆகியோர் சேர்ந்து போலியான ஆவணங்களை தங்கள் வங்கியில் கொடுத்து, அவர்களுக்கும், அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் என 103 கிரெடிட் கார்டுகளை வாங்கி உபயோகித்துவிட்டு, 75 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்" தெரிவித்திருந்தார்.

மோசடியில் சிக்கிய குடும்பம்

அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், சண்முகம், ஹரி, மாதவன் ராம் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர். மேலும், 103 கிரெடிட் கார்டுகள் வாங்கிய அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான குரோம்பேட்டையைச் சேர்ந்த சண்முகத்தின் குடும்பத்தாருக்கு மட்டும் ஐந்து கிரெடிட் கார்டுகள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் குடும்பத்தாரான ஹம்சா (சண்முகத்தின் அக்கா), சுந்தரராஜன் (சகோதரன்), வேதாச்சலம் (மாமா), சிவா, தினேஷ் ஆகியோரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அழைப்புவிடுத்திருந்தனர்.

இதற்கிடையில், ஜூன் 21ஆம் தேதியன்று சண்முகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், “எனது அக்கா, மாமா, சகோதரன் ஆகியோரது கிரெடிட் கார்டுகளை நான்தான் உபயோகித்து, மோசடி செய்தேன். அவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நேற்று (ஜூன் 22) மதியம் 12 மணிக்கு சண்முகத்தின் குடும்பத்தினரான ஹம்சா, வேதாச்சலம், சுந்தர்ராஜன் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவில் முன்னிலையாகினர்.

வாக்குமூலம் கொடுத்தவாறே வேதாச்சலம் உயிரிழப்பு

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சண்முகத்திடம் அடையாள அட்டையின் நகலை கொடுத்ததுதான் தெரியும், அதைக் கொண்டு அவர் கிரடிெட் கார்டுகள் வாங்கி உபயோகித்தது பற்றியெல்லாம் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். விண்ணப்பத்திலுள்ள கையெழுத்தை அவர்களின் கையெழுத்தோடு ஒப்பிடுகையில் மாறுபட்டிருந்ததால் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன.

முறையே முதலில் ஹம்சாவின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு பின், மதிய உணவு முடித்து 2.30 மணிக்கு ஆஜரானவர்களில் வேதாச்சலத்தின் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர் தண்ணீர் கேட்டவாறே மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த அவரின் மனைவி ஹம்சா, குடும்பத்தினர் அவருக்கு முதலுதவி அளித்ததுடன், உடனடியாக அவர்கள் வந்த ஆட்டோவிலேயே அவரை ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பேரி காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.50 லட்சம் மோசடி: கூட்டுறவு அலுவலர்கள் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details