சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூரப்பா நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அரசு ஆணையம் அமைத்து 2020ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரியும் துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பெற்ற படிப்புகளை மனுவில் பட்டியலிட்டுள்ள அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் விசாரணை ஆணையத்தை அமைத்து உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் வகையில், சீர்மிகு உயர் கல்வி நிறுவனமாக அறிவிக்க எடுத்த முயற்சிக்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுங்கட்சிக்கு அடி பணிய மறுத்ததால் தன்னை பழி வாங்கும் நோக்கிலும், நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.