சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
அதனால் ஏரியில் இருந்து பல்வேறு கட்டங்களாக உபரி நீர் 100 முதல் 8 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது. இவ்வாறு ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் படப்பை, ஆதனூர், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவை நிறைந்தது. அவ்வாறு நிறைந்து வெளியேறிய மொத்த தண்ணீரும் சேர்ந்து, அடையாறு ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்காக ஓடியது.
ஒரே நேரத்தில் பல ஆயிரம் கன அடி உபரிநீர் அடையாறு ஆற்றில் கலந்ததால், ஒரு கட்டத்தில் அனகாபுத்தூரில் அமைந்துள்ள அடையாறு ஆற்றுப் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்லத் தொடங்கியது. இதன் காரணமாக அடையாறு ஆற்றுப் பாலத்தின் கைப்பிடி தூண்கள் மற்றும் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் ஆகிய அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தற்காலிகமாக அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப் பாலத்தை போலீசார் தடுப்புகளை அமைத்து மூடி, அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.