சென்னை வில்லிவாக்கம் எம்பார்நாயுடு தெருவைச் சேர்ந்தவர் டபுள் ரஞ்சித். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 10) மாலை வில்லிவாக்கம் பகுதியில் ரவுடி டபுள் ரஞ்சித் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லிவாக்கம் காவல் துறையினர் ரஞ்சித்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட கருணாகரன் என்பவர் கொலைக்கு பழி தீர்க்க அக்கொலையில் தொடர்புடைய வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் டபுள் ரஞ்சித் ஒரு குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிணையில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது.