தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஊழியர்கள் வாக்களிக்க போதுமான நேரம் ஒதுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

By

Published : Mar 10, 2021, 6:21 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது.

எனவே, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதிகளில், அரசு ஊழியர்கள் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், "சொந்த தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து அங்கேயே வாக்களிக்கவும், பிற தொகுதிகள் அல்லது பிற மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கடைசி கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகின்றன. அந்த வாக்குச்சீட்டில் ஊழியர்களின் அத்தாட்சியை பெற வேண்டியுள்ளது. அத்தாட்சி பெற்றாலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

2019 மக்களவைத் தேர்தலின்போது 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 ஊழியர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களித்தனர். 37 ஆயிரத்து 712 ஊழியர்கள் வாக்களிக்கவில்லை.

அந்த அரசு ஊழியர்களின் வாக்குகளிலும் 62 ஆயிரத்து 624 வாக்குகள் அத்தாட்சி இல்லை என நிராகரிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 68 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன. பின்னர், கரோனா தொற்று காரணமாக மேலும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக தேர்தல் பணிகளுக்கு 6 லட்சம் ஊழியர்கள் அமர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.

தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (மார்ச் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது. தபால் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போதுமான ஊதியம் இல்லாமல் துணிச்சலாக தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் வாக்குரிமையை மறுக்க கூடாது. அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details