சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட இணையாளர்கள் 1 & 2 கட்டுப்பாட்டில் வரக்கூடிய சுமார் 1216 திருக்கோயில்களில் முதுநிலை கோயில்களில் பணியாற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "இந்த ஆய்வு கூட்டத்தில் ரூ.160 கோடி அளவில் சென்னை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய திருக்கோயில்கள், திருக்கோயில்களில் திருமண மண்டப வசதி, அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு, பசு மடங்கள் புனரமைப்பு உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சென்னையைத் தொடர்ந்து வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய 38 மாவட்டங்களிலும் 20 இணையானர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து அங்குள்ள திருக்கோயில்களில் உள்ள பணிகள், அதில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது போன்ற கூட்டம் சென்னையில் மட்டுமின்றி அனைத்து மண்டலங்களிலும் நடைபெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 14 மாதங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இன்று கூட 120 கோடி செலவில் பக்த கோடிகளுக்கான அடிப்படை வசதிகள் உட்பட்ட 54 பணிகளுக்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அறநிலையத்துறையை விட தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் கோயில் குளங்களில் மழைநீரை கொண்டு வருவது, உபரி நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதனை கண்காணிக்க ஒய்வு பெற்ற பொதுப்பணி, மாநகராட்சி துறை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உட்பட 9 பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 186 பேருக்கு பயிற்சி பள்ளிகளில் சேர்வதற்கான உத்தரவினை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.