காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும், தன் அரசும் நிலைத்தால் போதும் என்று முதலமைச்சர் செயல்படுவதாக விமர்சித்திருந்தார்.
தற்போது துரைமுருகனின் இந்த அறிக்கையைக் கண்டித்து விளக்கம் அளித்துள்ள மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறி இருப்பதாவது :
'விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் ஒளிபெற, ஏராளமான நீர் மேலாண்மைத் திட்டங்களையும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகவும் அறிவித்து சாதனை படைத்தது தமிழ்நாடு அரசு. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, தனது வழக்கமான பாணியில் மக்களை ஏமாற்றி, வீண் விளம்பரம் தேடும் முயற்சிகளில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உரிமை பறிக்கப்படுகிறது என்ற தவறான தகவலைப் பரப்பி வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல.
காவிரி நதி நீர் பிரச்னைகளில், தமிழ்நாடு அரசின் சாதனைகளையும், திமுகவின் துரோகங்களையும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள். காவிரி மேலாண்மை வாரியம், அம்மாவின் அரசு எடுத்த உறுதியான சட்டப் போராட்டங்களினால் தான் அமையப் பெற்றது என்பதை நாடே அறியும். திமுகவின் சாதனைகள் எல்லாம் காவிரியின் உபநதிகளான கபினி, ஹேமாவதி மற்றும் ஹாரங்கி குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதை வேடிக்கைப் பார்த்து, தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தது மட்டும் தான்.
காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையினை 5.02.2007 அன்று பிறப்பித்தது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசும் திமுக அங்கம் வகித்த மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்த தொடர் சட்டப் போராட்டங்களினால்தான் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.02.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.
இதன்பின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் முறையீட்டு மனுக்களை விரைவில் விசாரித்து ஆணை வழங்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளாலும், அதன்பின் அம்மா வழியில் செயல்பட்டு வரும் அஇஅதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளாலும் இம்மனுக்களில் 16.02.2018 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பில் இந்த இறுதி ஆணையை செயல்படுத்த ஒரு திட்டத்தை வகுக்கவும் ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் தான் 01.06.2018 அன்று உச்ச நீதிமன்ற ஆணையின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டு அமைப்புகள் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தமிழ்நாடு வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்.
மத்திய அரசு 24.04.2020 அன்று வெளியிட்ட அரசிதழில் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் பொருண்மைகளில் (Subjects) மத்திய அரசு அலுவலக விதிகளின் படி (Business Rules) சேர்த்து அறிவித்துள்ளது. இது வழக்கமான நிர்வாக நடைமுறைக்கான நடவடிக்கை என்பதை சம்பந்தப்பட்ட மத்திய நீர் வளத் துறை ஆதார உயர் அலுவலர்கள், சட்ட வல்லுநர்கள் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் ஒரு விளக்க அறிக்கையை 29.04.2020 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இருப்பினும், எதிர்கட்சித் துணைத் தலைவர் திரு. துரைமுருகன் அவர்கள், தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில், உண்மை நிலை அறிந்தும் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை திசை திருப்ப ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தும், காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டின் நீர் பங்கினை பெறத் தவறியதையும், அம்மாவின் அரசு தன் கடும் முயற்சிகளால் பெற்று தந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையையும் நாடே அறியும்.