தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவிருக்கிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுகவின் சார்பில் போட்டியிட்டவர்களில் 65 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணி கட்சிசார்பில்,10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியே அமர வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கவும் ஆதரவு பெருகி வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) கூட்டம் கடந்த 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மூன்று மணிநேரம் தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் 10ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.