சென்னை:ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடுத்த அவைத்தலைவர் குறித்தும், சசிகலா விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கூட்டம் தொடங்கி சில மணி நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன் தொண்டர்கள் சிலர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் ஆர்ப்பாட்டம்
இலத்தூர் தொகுதி் ஒன்றிய செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.ராஜி கரோனா காரணமாக கடந்த மே மாதம் 12ஆம் தேதி காலமானார். அதன் பின்பு ஒன்றிய செயலாளராக ஓ.எம்.சுரேஷ் நியமனத்திற்கு கிளை செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் அன்வர்ராஜா பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அன்வர்ராஜாவை அடிக்க பாய்ந்ததாக தெரிகிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.