அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ . பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நவராத்திரி பண்டிகையின் ஒன்பது திருநாள்களின் இறுதி நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் பக்தியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நவம் என்றால் ஒன்பது, நவராத்திரி நாள்களில் முதல் மூன்று நாள்கள் வெற்றி வேண்டி துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாள்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் கல்வி வேண்டி சரஸ்வதி தேவியையும் மக்கள் வழிபடுவார்கள். மகிஷாகானை தேவியானவள் ஒன்பது நாள்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழில் வளம் பெருகிட, மக்கள் அன்னையின் அருள் வேண்டி தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும். விஜயதசமி தினத்தன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அனைவரது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று, அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட, எங்களது மனமார்ந்த ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி