சென்னை: ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள்
வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிமுகவின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகர் பங்கேற்றனர்.
குண்டை தூக்கிப் போட்ட ஓபிஎஸ்: இதில் முதலாவதாக பேசத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயிலில் இருக்கும் போது தனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு கட்சிப்பொறுப்பு வழங்க வேண்டும் என்றார். அப்போது சட்டென்று குறுக்கிட்ட ஓபிஎஸ், முதலில் மாவட்டச்செயலாளர்களை மாற்ற வேண்டும் என பெரிய குண்டை போட்டார். இதற்கு, தற்போது எதற்கு மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “அம்மா இருக்கும்போது மாவட்டச்செயலாளர்களை மாற்றுவது இயல்புதான். ஒருவர் கட்டுப்பாட்டில் மாவட்டம் இருப்பதனால் பிரச்னைகள் வருகிறது. சென்னையில் கூட மாவட்டச்செயலாளர் ஆதிராஜாராம் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, தேனி மாவட்டச் செயலாளர் சையது, நீங்கள் சொல்லி தான் கட்சி விரோதச்செயல்களில் ஈடுபடுகிறாரா, அவரைக் கட்சியிலிருந்து நீக்கலாமா என ஈபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு, புகார் வந்தவர் மீது நடவடிக்கை எடுப்போம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
வாய்த்தகராறில் ஈடுபட்ட மூத்த நிர்வாகிகள்:இவர்களைத் தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தனக்கு தரும்படி கோரிக்கை வைத்தார். மேலும் கடந்த காலங்களில் தனது மாவட்டத்தில் வேலுமணி அரசியல் செய்தார் என்ற குற்றச்சாட்டை கூறினார். இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்க கூடாது என வைத்திலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய வேலுமணி, நீங்கள் கூட மற்ற மாவட்டங்களில் தலையிட்டு நாட்டாமை செய்வதாக வைத்திலிங்கத்திடம் கூறினார்.
பின்னர், வடமாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதிக்கம் செலுத்துகிறார் என வைத்திலிங்கம் கூறி முடிக்கும் நேரத்தில் வெகுண்டெழுந்த சி.வி. சண்முகம், 'இந்த நாட்டாமை எல்லாம் தஞ்சாவூர்ல வச்சுக்கோ' என தடித்த வார்த்தைகளில் பேச ஆரம்பித்தார். பின்னர் சற்று நேரம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மற்றவர்கள் முகம்சுழிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.