சென்னை:உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு எந்தவித அச்சமின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கு தேவையான கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து உயர்கல்விக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு வரை கல்வி நிறுவனங்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கும் வகையில் இணையதளத்தை மாற்றி அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா கூறும்போது, 'ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகைக்கான இணையதளம் 2023 ஜனவரி 30 அன்று திறக்கப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை சுமார் 3 லட்சம் மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்நோக்கப்படுகிறது.
இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023ஆம் கல்வியாண்டு முதல், முதன்முறையாக e-KYC முறையில் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணைக்கொண்டு ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று, வருமானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு, மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு (Aadhaar seeded to bank Account) கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.