தமிழ்நாடு

tamil nadu

ஜோதிகாவின் பேச்சை வைத்து சர்ச்சை கிளப்புவது மனசாட்சியற்றது - இயக்குநர் சரவணன்

By

Published : Apr 24, 2020, 12:10 PM IST

Updated : Apr 24, 2020, 12:33 PM IST

கரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் ஜோதிகாவின் பேச்சை வைத்து சர்ச்சை கிளப்பவது கொஞ்சமும் மனசாட்சியற்றது என இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.

jothika
jothika

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நன்கொடை அளிப்பதைவிட பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளும் உதவி செய்யுங்கள் என்று தஞ்சைக் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்து அமைப்புகள் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இயக்குநர் ரா. சரவணன் இதுகுறித்து பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நடிகர் சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். இப்படப்பிடிப்பு தஞ்சையில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால் எதையுமே செட் போடாமல் லைவாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்.

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு ஜோதிகா மருத்துவமனையின் மற்ற பகுதிகளை பார்த்தார்.

அப்போது பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தத்துடன் நோக்கினார். பச்சிளம் குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

அதனால்தான் கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். ஆயிரம் அன்ன சத்திரங்கள், ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்றுதானே ஜோதிகா பேசி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் 'கோயில் கட்டுவதைவிட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசினார் நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்திவிட்டார் எனச் சொல்ல முடியுமா?

ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும், அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதும் எங்கள் யூனிட்டுக்கு நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்கு பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால்தான் இந்த விளக்கம்.

அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன்.

விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களை கொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை எடுத்தார் ஜோதிகா. கால்களை வெயில் சுட்டுப் பொசுக்க, அதைக் காட்டிக்கொள்ளாமலேயே சமாளித்தார்.

தஞ்சை மக்களின் வாழ்வியலை அறிய, அப்படியே வாழ அவர் கற்றுக்கொண்டார். தஞ்சைக்கே உரிய வாஞ்சை கலந்த வார்த்தைகளைப் பேசக் கற்றார்.

“சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்...” எனச் சிலிர்த்த அவருடைய நல் மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது.

இந்தக் கரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது” என்று இயக்குநர் சரவணன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Apr 24, 2020, 12:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details