நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், தனது மனைவி, மகன் துஷ்யந்த் மற்றும் மருமகள் ஆகியோருடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ராம்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தங்கள் அனைவருக்கும் பிலவ தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள். பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக மேற்கொண்ட தேர்தல் பரப்புரைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. பயணத்திலும் பரப்புரைகளிலும் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள் நண்பர்கள், அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியைத் பகிந்துகொள்ள விரும்புகிறேன். ஜூலை 21ஆம் நாள் நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரைச் சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.