சென்னை: 'டால்டா கலந்து ஆவின் இனிப்பு தயாரிப்பு' குறித்து நாளிதழில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆவின் நிர்வாகம், "ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
ஆவின் நிறுவனம், பால் உப பொருட்களான பால்கோவா, மைசூர்பாக்கு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், பன்னீர், தயிர், வெண்ணெய், நெய் போன்ற 235 வகையான பால் உப பொருட்களை மாநிலம் முழுவதுமுள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி, மற்றும் வகைப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.