சென்னை: 25 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் முகவரி கொண்ட போலி பாஸ்போர்ட்டில் வந்ததைக் கண்டறிந்த சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அப்பெண்ணை இது குறித்து விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு (டிச.31) வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் முகவரியுடன், ஜல்குரி வில்லாகி என்ற பெயருடன் 25 வயது இளம்பெண் ஒருவர், வங்கதேசத்திற்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பி வந்தார். அந்த இளம்பெண்ணின் இந்திய பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகளுக்கு, இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், அந்த இளம்பெண்ணை வெளியில் விடாமல், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு அவருடைய பாஸ்போர்ட்டை, கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.
இதை அடுத்து பெண் குடியுரிமை அதிகாரிகள், அந்த இளம்பெண்ணை நீண்ட நேரமாக, துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண்ணின் உண்மையான பெயர் ஷார்மின் அக்தர்(25). அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் இவர், மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து, மத்தியப் பிரதேச மாநிலம், போபால் சென்று, சில ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து போலியான, இந்திய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுத்து, இந்திய பாஸ்போர்ட்டை போலியாக பெற்றுள்ளார். அந்தப் போலி பாஸ்போர்ட் மூலம், வங்கதேசத்திற்கு சென்ற ஷார்மின் அக்தர், மீண்டும் அதே போலி பாஸ்போர்ட்டில் டாக்காவில் இருந்து, சென்னை வந்துள்ளது தெரியவந்தது.