தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2023, 7:30 PM IST

ETV Bharat / state

இந்திய வம்சாவளி பெண்ணிடம் தாலியைக் கழற்ற சொன்னோமா? - சுங்கத்துறை விளக்கம்!

சென்னை விமான நிலையத்தில் மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண்ணிடம் தாலியைக் கழற்றும்படி கூறவில்லை என சென்னை விமான நிலைய சுங்கத்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தம்பதிகள் இருவர் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். இவர்களிடம் சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கெடுபடியாக நடந்துகொண்டதாகவும், மேலும் அந்தப் பெண்ணிடம் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை கழற்றும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், பத்து நாட்கள் கழித்து சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை விளக்கம் அளித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், "மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சமீபத்தில் மலேசியாவில் இருந்து இந்திய விமான நிலையம் வந்து இறங்கியதாகவும், அப்போது தனக்கு விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பெண் தனது கணவருடன் வந்திறங்கிய போது சென்னை விமான நிலையத்தில் இருந்த சுங்க அதிகாரிகள் தங்கத்தால் செய்த தனது தாலியை கழற்ற சொன்னதாகவும், அவர் அதை மறுத்ததால் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்தச் செய்தி முற்றிலும் தவறானது. மேலும் உண்மைக்குப் புறம்பானது.

அன்றைய தினம் இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் (மலேசிய வாழ் இந்தியர்கள்) அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து வெளியேற முற்படுவதை, பணியில் இருந்த சுங்க அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அந்த நகைகள் குறித்த விவரங்களை கேட்டனர். அப்போது, அவர்கள் அவை எங்கள் சொந்த நகைகள் என்று கூறி விவரங்களை அளிக்க மறுத்துவிட்டனர்.

மேலும், அந்தப் பெண் குறிப்பிட்டது போல் தாலியை கழற்றுமாறு சுங்க அதிகாரிகள் கூறவில்லை. அது மட்டுமின்றி, அந்தப் பெண் பயணி, அதிகாரிகள் தங்கள் சட்டப் பணியை செய்ய ஒத்துழைக்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார். இதனைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகள் நீண்ட நேரம் சுங்க விதிகளைப் பற்றி விளக்கிய பின்பு, அந்தப் பெண்ணின் கணவர் மட்டும், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் தங்க காப்பை சோதனைக்கு உட்படுத்த அனுமதித்தார்.

அந்த தங்க நகைகளின் எடை 285 கிராம் (சுமார் 35 சவரன்). அதன் இந்திய மதிப்பு ரூபாய் 15 லட்சம். எனவே அந்த நகைகளுக்கு, 6.5 லட்சம் சுங்கவரி விதிக்கப்பட்டது. அதைக் கட்டுவதற்கு மறுத்து விட்டனர். எனவே அந்த நகை கைப்பற்றப்பட்டு பயணிகளிடம் ரசீது வழங்கப்பட்டது. மேலும் அந்த நகைகள் மீது உரிய சுங்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அவர்கள் மலேசியா திரும்பும் போது அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பின்பு உடனடியாக நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்திய சுங்கத்துறை பயண உடைமைகள் 2016 விதிப்படி இந்தியாவில் வசிப்போர், மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டுப் பயணிகள், ரூபாய் ஐம்பதாயிரம் வரை மதிப்புள்ள நகைகளை சுங்கவரி செலுத்தாமல் இந்தியாவிற்குள் கொண்டு வரலாம். அதற்கு மேல் இருந்தால் சுங்கவரி செலுத்த வேண்டும்" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:100 ஆண்டுகள் பழமையான கனகமூலம் சந்தையை மாற்ற எதிர்ப்பு - வியாபாரிகள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details