சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையின் மேம்பாட்டிற்கு பல்வேறு புதியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து தகைச்சால் பள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கும், உயர்கல்வியினை முடித்த பின்னர் வேலை வாய்ப்பினை பெறவும் நான் முதல்வன் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
கரோனா தொற்று குறைந்த பின்னர் 2021ம் ஆண்டில் மாணவர்களுக்குப் பகுதியாகவும், சுழற்சி முறையிலும் பள்ளிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து 2022 பிப்ரவரி 1 ந் தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் வழக்கம் பாேல் 100 சதவீதம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதேபாேல் நான் முதல்வன் என்ற திட்டத்தை மார்ச் 1 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறவும், மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நான் முதல்வன் இணைய முகப்பில் ௨௦௦௦ த்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் மூலம் பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறாமல், மே மாதம் நடத்தப்பட்டது.இதற்கான தேர்வு கால அட்டவணை மார்ச் மாதம் 2 ந் தேதி வெளியிடப்பட்டது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளியின் மீது ஆர்வத்தை உருவாக்கும் வகையில் நம் பள்ளி நம் பெருமை என்ற பரப்புரைத் திட்டத்தை மார்ச் 8 ந் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களும் பங்கேற்கும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மார்ச் 21 ந் தேதி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழுவின் கூட்டத்தில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 1 ந் தேதி புதுதில்லியில், மேற்கு வினோத் நகரில் உள்ள தில்லி அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்டார். தில்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 13 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் எனவும், அதேபோன்று தமிழ்நாட்டிலும் பள்ளிகள் துவக்கப்படும் எனவும் அறிவித்தார்.
மாநிலக் கலவிக் கொள்கைக்கான குழுவின் உறுப்பினர்களை ஏப்ரல் 5 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு ஆண்டிற்குள் குழு கொள்கையை தயார் செய்து அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜூன் 1 ந் தேதி முதல் 12 ந் தேதி வரையில் நடைபெற்ற ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்பில் உலகளாவிய சாதனையைப் படைத்தனர். கரோனா தொற்றினால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளைக் களையும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 13 ந் தேதி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு கற்பிக்கும் பணியும், வாசிப்பு திறனும் கற்றுத்தரப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்வது அதிகரித்து வந்தது. அதற்கு காரோனா தொற்றால் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுதான் காரணம் எனவும், மாணவர்கள் மன அழுத்ததுடன் பள்ளிக்கு வருகின்றனர் என கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 27 ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கும் திடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு மன நல ஆலேசானையும் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் செப்டம்பர் 5 ந் தேதி நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப் பெண் திட்டத்தைத் துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் இளங்கலை பாடப்பிரிவினை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் அனைத்து வசதிகளுடன் 15 மாதிரிப் பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையின் காரணமாகப் பள்ளிக்கு கிளம்பி வரும் போது, காலையில் உணவு உண்ணாமல் வருகின்றனர். எனவே அவர்களுக்குக் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அந்தத் திட்டத்தை செப்டம்பர் 15 ந் தேதி மதுரையில் துவக்கி வைத்தார்,
மாணவர்களிடம் போதைப் பழக்கம் அதிகரிக்கத் துவங்கியதுடன், மாணவர்களைக் கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் கலச்சாரமும் அதிகரிக்கத் துவங்கியது. இது போன்ற குற்றச்செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும், அவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறையை இணைத்து சிற்பி என்ற திட்டத்தை செப்டம்பர் 15 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.